மனித இனம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பல்வேறு நோய்களையும் அதற்கான மருந்துகளையும் கண்டறிந்து வந்துள்ளது. இத்தகைய கண்டுபிடிப்புகள் மக்களிடையே பரவலாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இவற்றை நூலாகப் பதிந்து வைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வந்துள்ளன. மருந்தியல் பற்றிய நூல்களை முதன் முதலில் உலகுக்கு வழங்கிய பெருமை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரியது என்றும் கி.மு. 2500ஆம் ஆண்டில் சரகர் என்னும் மருத்துவர் தாவரங்களிலிருந்து பெறப்படும் முந்நூறு மருந்துகளைப் பற்றிக் குறிப்பெழுதியுள்ளார் என்றும் சொல்லப்படுகின்றது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
காலப்போக்கில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் போன்ற பல மருத்துவ முறைகள் வளர்ந்தன. இன்றைய நவீன மருத்துவம் என்பது கி.மு. 460இல் வாழ்ந்த கிரேக்க நாட்டு மருத்துவர் ஹிப்போகிரடிஸ் காலத்திலிருந்து தொடங்கியதாகவும் அது கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் சோதனைகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக வளர்ச்சி பெற்றது என்றும் கருதப்படுகின்றது (மருந்தியல் மு. துளசிமணி, ச. ஆதித்தன், 1985, ப. 3). இத்தகைய அறிவியல் அடிப்படைகள் உணரப்படாமலும் சொல்லப்படாமலும் சில குறிப்பிட்ட சாதியினராலோ, மரபுவழி மருத்துவராலோ, பூசாரிகளாலோ, பொது மக்களுள் யாரேனும் ஒருவராலோ பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வரும் மருத்துவ முறையை நாம் நாட்டுப்புற மருத்துவம் என்று குறிப்பிடுகிறோம்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற மருத்துவம் உருவான வரலாறு
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற மருத்துவம் உருவான வரலாறு குறித்து ந. சந்திரன் (2002, பக். 14-16) கூறும் கருத்துகளைக் காண்போம். தொல்பழங்கால மனிதன் விலங்குகளின் தாக்குதல்களினாலும் இயற்கையின் சீற்றத்தாலும் எதிர்பாரா நோயினாலும் ஏற்பட்ட துயரங்களைப் போக்கிக்கொள்ள வழி தேடினான். தனித்தனியாய் வாழ்ந்த மனிதன் கூடிவாழத் தலைப்பட்டபோது ‘சமுதாயம்’ எனும் கூட்டமைப்புத் தோன்றியது. நிலையான இருப்பிடம், நிலையான தொழில் ஆகியவை தோன்றினாற் போல நிலையான உறவும் தோன்றியது. அதனால் பலருடைய அறிவையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்கின்ற வாய்ப்பு, கூட்டமைப்புச் சமுதாய உறுப்பினருக்கும் கிட்டியது. அத்தகைய அறிவும் அனுபவமும் நோய் தீர்க்கும் முயற்சிக்குப் பெரிதும் துணை செய்தன.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இயற்கையோடு தொடர்பு கொண்டிருந்த மனிதன் தன்னைச் சுற்றி வளர்ந்துள்ள மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி, விதை ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கினான். இதனால் அவற்றின் மருத்துவக் குணங்களும் அவனுக்குப் புலனாகத் தொடங்கின. ஆங்காங்குக் கிடைக்கக்கூடிய தாவர வகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து அவற்றை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டபோது நாட்டு வைத்தியத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் மனிதர்களுக்கு நம்பகத் தன்மை உண்டானது. நோயுற்ற மனிதன் மருத்துவனை நம்புவதும், மருத்துவன் மருந்தை நம்புவதும் காலத்தின் தேவையாகியது. இந்நிலையில், நாட்டு வைத்தியர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர். இம்மதிப்பைக் காத்துக்கொள்ள அவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவத்தில் மேலும் விளக்கம் தேட முற்பட்டனர். இத்தேடல் முயற்சி அவர்களுக்கு இத்துறையில் அனுபவ முதிர்ச்சியைத் தந்தது. இப்பெரியோர்களின் அனுபவக் கொடையே நாட்டு மருத்துவமாகும்(ந. சந்திரன், பக். 14-16).
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பல காலம் பலர் முயன்று கிடைத்த வெற்றிகளின் பயனாக ‘இதற்கு இது மருந்து’ என்ற தெளிவு பிறந்தது. மனிதன் தன் நோய்களுக்கு மட்டுமன்றித் தன் வளர்ப்பு விலங்குகளின் நோய்களுக்கும் மருத்துவம் பார்த்தான். மாமிச உணவுப் பழக்கம் காரணமாக விலங்குகளின் உள்ளுறுப்புகளைக் கூர்ந்து கவனித்த அனுபவம் அவனது மருத்துவ அறிவு வரை உதவியது. இவ்வாறு நாட்டு மருத்துவம் மேலும் வளர்ந்தது.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு பெயர்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற மருத்துவமானது நாட்டு மருத்துவம், கை வைத்தியம், பாட்டி வைத்தியம், வீட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயர்கள் மருத்துவப் பொருள்கள் அடிப்படையிலும் மருத்துவம் செய்கின்ற ஆள் அடிப்படையிலும் அமைந்துள்ளன.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற மருத்துவம் குறித்த விளக்கம்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டுப்புற மருத்துவம் குறித்து அக்கறை கொண்ட மேனாட்டு, நம்நாட்டு அறிஞர்கள் அவற்றைக் குறித்து விளக்கங்கள் பல கூறினர். இவர்களது இந்த விளக்கங்கள் நாட்டுப்புற மருத்துவத்தை வரையறை செய்ய முயன்றதன் விளைவு எனக் கூறலாம்.
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
‘‘தலைமுறை தலைமுறையாகத் தெரிந்துகொண்ட அனுபவத்தின் உதவியோடு எளிய முறைகளில் வீட்டிலேயே நோய்களைப் போக்கிக்கொள்ளும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம்’’ என்கிறது ஸ்டெட்மேன் மருத்துவ அகராதி (Stedman’s Medical Dictionary).
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
டான் யாடர் என்னும் அமெரிக்க அறிஞர் நாட்டுப்புற மருத்துவத்தை ‘வீட்டுவைத்தியம்’(Home Remedies) எனக் குறிப்பிட்டார். மற்றொரு அமெரிக்க மருத்துவர் ஜார்விஸ் ‘இயற்கை மருந்து’ எனக் குறிப்பிட்டார். சு. சண்முகசுந்தரம், ந. சந்திரன் ஆகியோர் கூறும் விளக்கங்களையும் ஒப்புநோக்கினால் நாம் நாட்டுப்புற மருத்துவத்தைப் பின்வருமாறு விளக்கலாம். ‘ஒரு நாட்டின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்ப மக்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு அந்தந்த நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு மக்கள் தம் பட்டறிவால் செய்துவரும் மருத்துவ முறையே நாட்டுப்புற மருத்துவம் ஆகும்’.
Reference: http://goo.gl/IaGULY
|
Saturday, March 22, 2014
நாட்டுப்புற மருத்துவம்
Subscribe to:
Post Comments (Atom)
அனைத்து செய்திகளும் பயனுள்ளவை..நன்றி
ReplyDeleteமுலிகை மருத்துவம் பார்க்க சான்றிதழ் தேவையா?
ReplyDelete